திருவல்லிக்கேணி விடுதிகளில் தங்கி இருந்த காலகட்டத்தில் கஷ்டம் மட்டுமே கடமையாக, அழையா விருந்தாளியாக வந்து குடியமர்ந்த தினங்களில், மாலை வேளையில் மெரினா கடற்கரை செல்வது மட்டுமே என் போன்ற நண்பர்களுக்கு ஒரு ஆறுதலாய் இருக்கும். ஆகவே தினமும் மாலை நேரம் ஆனதும் கடற்கரை செல்வது அனைத்து நண்பர்களுக்கும் கிட்டத்தட்ட மியாமி கடற்கரை செல்லும் சுகத்தை தரும் உணர்வு. ஆகவே கடமையே கண்ணாக தினமும் மாலை வேளைகளில் மெரினா கடற்கரை எங்களை ஈர்த்துகொள்ளும். அப்படி தினமும் சென்று அமர்ந்திருக்கும்போது கடற்கரை தரும் இதமான காற்று, மணல்வெளி, அலையின் ஆக்ரோஷம், குழந்தைகளின் விளையாட்டுகள், ராட்டின வியாபாரியின் குரல், சுண்டல் சிறுவனின் அழைப்பு, சுக்கு காப்பி இளைஞனின் கூவல் இவை அனைத்தையும் விட அதிகமாக ஈர்க்கும் ஒரு விஷயம் அந்த மெரினாவுக்கே உரிய குணத்தில் அங்கு உண்டு.
ஆம் "காதலர்கள்" இதுதான் அந்த வயதில் அதிகம் குறுகுறுப்பான உணர்வு அந்த மெரினாவில். :)
தினம் மாலை வேளையில் அங்கு செல்லும்போதும் ஏதாவது காதலர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டே இளைப்பாறிவிட்டு (மலையை சாய்க்கிற வேலை செய்து விட்டு வந்தமர்ந்ததில்லை, வழக்கம்போல வேலையில்லாமல் வெட்டியாக மேன்ஷனில் இருந்துவிட்டு) மீண்டும் மேன்ஷனுக்கு திரும்பி செல்லும்போதும் மனது இரவு முழுவதும் குறுகுறுக்கும். மறுநாளும் வேலை (!) முடித்துக்கொண்டு மீண்டும் இளைப்பாற(!) செல்லும்போதும் வழக்கம் போல காதலர்கள் வரவேற்ப்பார்கள்(என்னை அல்ல, எனது வயிற்றெரிச்சலை).
இவ்வாறாக காலம் நகர்ந்து கொண்டிருந்த கால கட்டத்தில் வழக்கமாக இளைஞர்களுக்கு வரும் மிஸ்டுகால் எனக்கும் ஒருநாள் எனது அலைபேசியில் வந்தது, அந்த எண்ணை மீண்டும் தொடர்புகொண்டபோது "சாரிங்க என் அண்ணனுக்கு கால் பண்ணினேன், தவறாக உங்களுக்கு வந்து விட்டது" என்று கூறி தொடர்பு துண்டிக்கப்பட்டது. துண்டிக்கப்பட்டது எனது போன் தொடர்பு மட்டுமல்ல எனது இரவு தூக்கமும் தான். தினமும் இரவு வேளைகளில் அந்த எண்ணை தொடர்பு கொள்ளலாமா வேண்டாமா என்று நினைத்து நினைத்தே தூக்கம் என்னை விட்டு மிக நீண்ட தூரம் சென்று விட்டதை எனது கண்ணின் கீழ் இருந்த `கருவிழி` சில வாரங்களுக்கு பின் உணர்த்தியது நிலைக்கண்ணாடியின் வடிவில்.
பின் ஒருநாள் தைரியத்தை வரவழைத்து கொண்டு அந்த எண்ணை தொடர்புகொண்டேன். "மச்சான் எப்படிடா இருக்க?
போன் பண்றதேயில்லை, வேலைக்கெல்லாம் ஒழுங்கா போறியா?" என்று மூச்சு விடாமல் ஒப்பித்ததும் மறுமுனையில் இருந்து அவளின் அம்மாவின் குரல், "யாருப்பா நீ? என் பொண்ணுக்கு அடிக்கடி தொந்தரவு குடுக்குறது? போலீஸ்ல புகார் செய்கிறேன்" என்று குரல் இடியாய் இறங்கியது. அப்போதுதான் உறைத்தது `கருவிழியை தேவையில்லாமல் வரவழைத்து விட்டோமோ` என்று. பின்னொருநாள் மாலை நேரம் மீண்டும் அதே எண்ணிலிருந்து மறுபடியும் மிஸ்டு கால் வந்தபோது புறக்கணித்து விட்டேன் திருவல்லிக்கேணி இன்ஸ்பெக்டர் கருப்பசாமியின் அடியையும் , உதையையும் நினைவில் கொண்டு.
மறுநாள் மீண்டும் அழைப்பு வந்தபோது, `நாம்தான் தொந்தரவு செய்யவில்லையே` என்ற எண்ணத்தில் " ஹலோ யாருங்க? எதுக்குங்க தொந்தரவு பண்றீங்க? நான் தான் உங்களுக்கு தொந்தரவு குடுக்கலியே அப்புறம் ஏன் நீங்க என்னை மிரட்டுறீங்க? எங்களுக்கும் ஆள் இருக்காங்க, எங்களாலும் போலீஸ் ஸ்டேஷன் போக முடியும்" என்று மூச்சுவிடாமல் சொல்லி முடித்த பிறகு சில மணித்துளிகள் மவுனமாக இருந்த மறுமுனை மவுனம் கலைத்து திருவாய் மலர்ந்தது.
"மன்னிச்சுக்கோங்க சார், ஒரு எண் குழப்பத்தால் தான் உங்கள் எண்ணிற்கு அடிக்கடி அழைப்பு வந்து விடுகிறது" என்றாள் அவள். அப்போதுதான் நிம்மதியே வந்தது. "பரவாயில்லீங்க" என்றது எனது முனை மிக்க நிம்மதியுடன்.
பிறகு அடிக்கடி அழைப்புகளும் விசாரிப்புகளுமாக காலம் நகர்ந்துகொண்டிருந்த வேளையில் ஒருநாள் "சந்திக்கலாமா?" என்ற கேள்வியும் வந்தது.
"இப்போ கொஞ்சம் வேலை அதிகம்(!), இன்னும் கொஞ்ச நாள் கழித்து பார்க்கலாமே!" என்றேன் எனது பாக்கெட்டின் நிலையை கவனத்தில் கொண்டு. அதன்பிறகு அடிக்கடி அழைப்பு வந்துகொண்டே இருந்தது சந்திக்கலாம், சந்திக்கலாம் என்று. வெகு நாள் கடத்திய பிறகு ஒருநாள் ஒத்துக்கொண்டேன் பாக்கெட்டை சிறிது கனமாக்கிய நம்பிக்கையில். மறுநாள் காலையில் தி.நகரில் சந்திப்பது என்று முடிவாகிவிட்டது. அப்போதுதான் மனது அடித்துகொண்டது ஒரு முக்கியமானவர் இருந்தால் மட்டுமே இந்த சந்திப்பை இனிமையாக்க முடியும் என்று. ஆம் அவர்தான் "பைக்``. என்னிடம் `அவர்` இருந்ததில்லை அந்த காலகட்டத்தில். ஆகவே எனது நண்பனின் உதவியை நாடினேன். அவனும் வள்ளலாக சரி என்று சொல்லிவிட்டான். அப்போது புரியவில்லை அவன் சொன்னது `சரி` அல்ல `ஆப்பு` என்று.
மறுநாள் காலையில் நன்கு குளித்துவிட்டு, பக்கத்து அறை சாப்ட்வேர் நண்பனிடம் வாசனை திரவியம் வாங்கி பூசிக்கொண்டு ஓசி பைக்கில் அமர்ந்து எல்ஐசி கட்டிடத்தை கடக்கும்போதுதான் உற்சாகமாக இருந்தது. பல சிக்னல்கள், மற்றும் சிக்கல்கள் கடந்து தி.நகரை அடைந்து விட்டாகி விட்டது. அங்கு சென்று அவளை கண்டுபிடித்து விடலாம் என்றாள் போனில் காசு இல்லை. ஒருவழியாக பல வேளைகளில் இளைஞர்களை காப்பாற்றும் மஞ்சள் பெட்டியை கண்டுபிடித்து ஒரு ரூபாய் நாணயத்தை அதனுள் நுழைத்து ரிசீவரை காதில் திணித்து நின்றபோது அழகான குரலில் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் சினுங்கினாள் "நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர் தற்சமயம் உபயோகத்தில் இருப்பதால் சிறிது நேரத்திற்கு பின் முயற்சிக்கவும்" யார் யாரை உபயோகிக்கிறார்கள் என்று தெரியாமல் குழப்பத்திலேயே மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய துவங்கினேன் கஜினி முகம்மதை போல, கடைசியில் செல்போன் தேவதை கண் திறந்தாள். ஆம் வழக்கம்போல "அப்பா கிட்ட பேசிட்டு இருந்தேன், எங்க இருக்கீங்க" என்றாள். ஒரு கடையின் பெயரை சொல்லி நான் அணிந்துள்ள உடை, செருப்பு மற்றும் இன்ன பல இத்யாதிகளையும் சொல்லி முடிக்கும் போது தான் கவனித்தேன் எனக்கு பின்னால் என்னை போல பாதிக்கப்பட்ட இன்னும் பல வருங்கால இந்திய தூண்கள் நிற்பதை.
பஸ்ஸில் வந்திறங்கிய அவள் சீக்கிரமே என்னை கண்டுபிடித்து விட்டாள், அப்போதுதான் உறைத்தது அனுபவசாலிகள்(!), திறமைசாலிகளை விட மேலானவர்கள் என்று! அப்போது சொன்னாள் "இங்கிருந்து சீக்கிரம் சென்று விடலாம், அப்பாவிற்கு தெரிந்த பலர் இங்கு உள்ளனர். அவர்கள் பார்த்துவிட்டால் பிரச்னை ஆகி விடும்" நானும் பைக்கை உதைத்து அவளை பின் இருக்கையில் அமர்த்தி சிறிது தூரம்தான் சென்றிருப்பேன் அதற்குள் பைக் திடீரென நடு ரோட்டில் நின்றுவிட்டது. அவளை இறங்கசொல்லி விட்டு பைக்கை ஓரமாக நிறுத்தி உதைக்க ஆரம்பித்தேன். மழை பெய்த சந்தோஷத்தில் பூமித்தாய் குளிர்ந்தாள், அவ்வளவு வியர்வை என் உடலிலிருந்து பூமியை நனைத்திருந்தது. அந்த
நேரத்தில் அவள் என்னிடம் வந்து " என் வீட்ல தேடுவாங்க நான் கிளம்புறேன்"
என்று நைசாக கழன்று கொண்டாள். என்ன செய்வது என்று தெரியாமல் உடல் வியர்வையில்
நனைந்திருக்கையில் பெட்ரோல் டேங்கை திறந்து
பார்த்தேன், ஒருதுளி கூட இல்லாமல் பெரும்பாலான நேரங்களில் வறண்டிருக்கும் காவிரி
ஆற்றை போல இருந்தது, அப்போதுதான் ஞாபகம் வந்தது முந்தின நாள் இரவு என் நண்பன்
சொன்ன வார்த்தைகள் "வண்டியில ஃபுல் டாங்கு பெட்ரோல் இருக்கு அண்ணா!!!"
ஊருநாட்டான்
migavum arumai
ReplyDeletenaangu nimidangalil novel padithathai pondra anubavam kidaithathu
vaalthukkal
Nantri thiruvaalarukku...!
ReplyDelete